அண்மைய பதிவுகள்

சன் டி.வி யின் "நிஜம்". பூலாம் வலசு கிராம சேவல் கட்டு.

22.01.2010 அன்று இரவு சன் டி.வி.யில் ஒளிபரப்பான நிஜம் நிகழ்ச்சி பூலாம் வலசு கிராமத்தில் பொங்கலையொட்டி நடந்து வரும் சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டையைப்பற்றி இருந்தது. கொஞ்சம் சுவாரஸ்யமாய்தான் இருந்தது நிகழ்ச்சி. ஆண்டு தோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் சண்டைக்காக கொண்டு வரப்படுகின்றனவாம். அவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் இறந்து போகின்றனவாம்.



ரத்தமும், சேவலின் இறக்கைகளும் அந்த மண்ணின் நிறத்தையே மாற்றியிருந்தன.

ஒவ்வொரு சேவலும் இதற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக பயிற்றுவிக்கப்படுகின்றனவாம். அதன் காலில் கட்டிவிடப்படும் கத்தி நேர்த்தியாக கூர்மைப்படுத்தப்படுகிறது. அவைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வதைப் பார்க்கையிலே பயங்கரமாகஇருக்கிறது.

தோற்று உயிர் விடும் சேவலை, ஜெயித்த சேவலின் உரிமையாளர் எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு விடுவார்களாம். ஒருவர் தன வெற்றி பெற்ற சேவலை பக்கத்தில் வைத்துக்கொண்டு, தோற்றுப்போன சேவலின் இறக்கைகளை பிய்த்துக்கொண்டே பேட்டி அளித்தார்.

தோற்றுப்போன சேவல் 1500 ரூபாய் வரை கூட விலை போகுமாம்.

ஒரு சில சேவல்கள் மூன்று, நான்கு சேவல்களைக் கூட தோற்கடித்து விடுமாம்.
சேவல்கள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கே கம்பீரமாய் இருக்கிறது.

அந்த ஊர்க்காரர் ஒருவர் சொன்னது :

"இத ஒரு ஜாலியான விளையாட்டுங்க. நாங்க அதுகள துன்புருத்துரதில்லை. அதுக சண்டை போடறத மட்டும்தாங்க பாக்குறோம். ஒரு ஜாலிதான். மத்தபடி சூதாட்டம் மாதிரி பணம் வச்சு ஆடுறதில்ல."

ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புருத்தப்படுகின்றன, அதனை தடை செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கை என்பதால், இவரது பேச்சு இப்படியிருந்தது.

சேவல்கள் சண்டைக்கு எப்படி தயாராகின்றன என்பதற்கு,
இன்னொரு சேவல் உரிமையாளர், (வயது 25 க்கு மேல் இருக்காது.) சொன்னது.

"குறைஞ்சது ஒரு வருஷம் பயிற்சி கொடுப்போம். முதல் நாலு மாசத்துக்கு இருட்டுலே வச்சிருப்போம். அடுத்ததா, ஒரு கோழி கூட இணை சேர்த்து விடுவோம். அதுக ரெண்டும் மாசம் சுத்துற வரைக்கும் விட்டுட்டு, திரும்ப நாலு மாசம் நல்ல வெயில் மணல்ல விட்ருவோம். அப்புறம் தினமும் காலைல அதுக்கு கொஞ்சமா கம்பு (உணவு) கொடுத்துட்டு, அதோட எடைக்கு சமமான சேவலோட மோத விடுவோம். நல்ல மதியான வெயில்ல தண்ணில விட்டு நீச்சல் அடிக்க விடுவோம். நீச்சல் அடிச்சாதான் அது சண்டைல மேல பறந்து ஏறிப்போயி தாக்கும்." என்றார்.

வேடிக்கை பார்க்க வந்த இன்னொரு வயதானவர்,

" ஒரு ஜாலியான விளையாட்டுங்க. ஜல்லிக்கட்டு - ங்கற பேர்ல மாட்ட கஷ்டப்படுத்துறாங்க. குத்து சண்டை ல மனுசனை மனுஷன் அடிக்கறான். சேவல் சண்டைல நாங்க எதுவும் பண்றதில்ல. வேடிக்கை மட்டுதான் பாக்குறோம்." என்றார். மேலும் தொடர்ந்தவர் "சேவல் வளக்குறது என்ன வச்சு அழகு பாக்கவா ? அடிச்சு திங்கதானே. நாம அதை அடிக்காம சண்டை போட விட்டு அடிக்கிறோம். இது என்ன தப்பு" என்றார்.

அவரிடம் பேட்டி எடுத்த பெண்ணும், அவர் பேசும் நியாயத்திற்கு என்ன சொல்வது என தெரியாமல் சிரித்தபடியே நின்றார்.

இது சரியா, தவறா என எனக்கும் தெரியவில்லை. ஆனால், நாம் ரசிக்கும் போட்டிக்காக ரத்தம் சிந்தும் சேவல்களை பார்க்கையில் பாவமாய் இருந்தது.

என் மனதில் எழுந்த சில எண்ணங்கள் மட்டும் இங்கு வைக்கிறேன்.

- போட்டிக்காக ஒரு வருடம் சேவல்களை தயார்படுத்தும்போது மனதில் எவ்வளவு குரூரமான எண்ணம் இருக்கும்.

- தோற்றுப்போன சேவலின் உரிமையாளரின் மனது என்ன பாடுபடும்?

- 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் கூட இந்த செயலை செய்யும்போது, அடுத்த தலைமுறையும் இதனை தொடரப்போகிறதா ? டாக்டர் அப்துல் கலாமின் கனவை எப்படி நிறைவேற்றப்போகிறோம் ?

பொறுத்திருந்து பார்ப்போம்.



1 comments:

Anonymous said...

dr apdulkalam kanava vidunga iathu yanga kanavuu

Post a Comment

Blog Widget by LinkWithin