அண்மைய பதிவுகள்

ஆயிரத்தில் ஒருவன் - தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் ?



தமிழில்
எடுக்கப்படாமல் ஆங்கிலத்திலோ, அல்லது இந்தியிலோ எடுக்கப்பட்டிருந்தால் இது போல தமிழ் படம் தமிழில் வராதா என பல பேர் ஏக்கத்தில் கூப்பாடு போட்டிருப்பார்கள். ஏனோ, தமிழில் எடுத்ததால், எக்கச்சக்க விமர்சனங்கள்.





மேடை நாடகங்களை திரைப்படமாக்கி, பின்னர் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் திரைப்படமாகி, சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை திரைப்படங்களாக மாறி, தமிழ் சினிமா ஒரு ஆரோக்யமான பாதையில் இருந்த போது, ஹிந்தி படங்களின் தழுவல்களும், அவற்றின் அப்பட்டமான காப்பிகளையும் கண்டு வியந்து, நமது சுயத்தை தொலைத்துக்கொண்டோம். பின்னர் தமிழ் சினிமாவில் காதல் காட்சிகள், பாட்டு , சண்டை என நாமாகவே ஒரு எல்லை வகுத்து கொண்டோம்.

இப்போது அதுவும் இல்லாமல், தமிழில் கற்பனை வறண்டு போனதோ என நினைக்கும் அளவுக்கு, தெலுங்கு, பிரெஞ்சு போன்ற பிற மொழிப்படங்களின் கதைகள் நம்மை ஆக்ரமித்க்க்கொள்ள துவங்கியிருக்கிறது.



வெகுஜன ரசனையுடன் (குத்துப்பாட்டு, சண்டைக்காட்சிகள்) ஆயிரத்தில் ஒருவன் பார்க்க செல்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான் (அதுவும் கொஞ்சம்தான் ஏமாற்றம். படத்தின் முதல் பாதி எல்லோரும் ரசிக்கும்படியாகவே உள்ளது). ஆனால், இவற்றையெல்லாம் தாண்டிய தமிழ் சினிமா பார்க்கவே முடியாதா என ஏங்கி கிடப்போருக்கு கண்டிப்பாய் வரப்பிரசாதம்தான் இந்தப்படம்.

படம் மூன்று மணி நேரம் என்ற போதிலும், அதற்குள் முடிந்து விட்டதே என ஏமாற்றம் ஏற்படுகிறது.

வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பார்களே.. அது போல பெரும் பேரரசை இழந்து, எங்கோ ஒரு குகையில் இன்னமும் பழைய நினைப்புடனே தஞ்சை மண்ணின் செழுமை பற்றி எண்ணி எண்ணி, எப்பொழுது நாம் இழந்த மண்ணை பார்ப்போம் என வேதனையுடன் காத்திருக்கும் சோழர் கூட்டம் மற்றும் அதன் தலைவனாய் வரும் பார்த்திபன். (தாய் தின்ற மண்ணே... பாடலில் உணர்ச்சிவசப்படும் சோழன். மொத்த திரையரங்கமும் அமைதியாய் ரசித்தது அந்த பாடலை.)

தூதன் ஒரு நாள் வருவான் என நம்பு சோழ மக்களுக்கு தூதனாய் வரும் கார்த்தி.

சோழர்கள் கவர்ந்து போன தங்களின் குல தெய்வத்தின் சிலையை மீட்க, பழைய பகையுடன் வஞ்சகமாய் அவர்களுடன் உறவாடி, அவர்களை தோற்கடிக்க ராணுவத்தை வரவழைக்கும் பாண்டிய வம்சத்தின் இளவரசி ரீமா சென். (தனது பரம்பரை வரலாற்றை சொல்லும்போது நமக்கும் நம்முடைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.)

தன தந்தையை இது போன்ற முந்தையதொரு பயணத்தில் தொலைத்த ஆண்ட்ரியா.



ஒவ்வொரு நடிகர்களின் பங்களிப்பும் மிகவும் அருமை. (நண்பனை காப்பாற்ற நண்பனின் மீது விழும் ஈட்டிக்குத்துகளைஎல்லாம் தன மீது வாங்கி தலை வெட்டப்பட்டு உயிர் விடும் மனோகர், மற்றும் ஒவ்வொரு துணை நடிகர்களும் உட்பட).

சோழர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும், தடைகளை கடந்து செல்லும் காட்சிகள் அருமை.

நமது முன்னோர்களின் தமிழ், அவர்களின் போர் முறைகள் போன்றவற்றை கொஞ்சமேனும் இப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலப்படங்களை பார்க்குபோது அவர்களின் பேச்சு புரியாமல் செய்கைகளாலும், உணர்வுகளாலும் காட்சியை புரிந்து கொண்டிருப்போம் சில நேரங்களில். அதே போல, நமது தமிழ் வார்த்தைகள் கூட புரியாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளைக்கொண்டு காட்சிகளை புரிந்து கொள்ளும்போது மனது கொஞ்சம் வலிக்கிறது.எவ்வளவு வார்த்தைகளை இழந்து விட்டோம்.

தற்போதைய ஆயுதங்கள் எதையும் பற்றி தெரிந்து கொள்ளாத ஒரு தேசம், அந்த ஆயுதங்களால் சூரையாடப்ப்படும்போது அந்த இனத்தின் தலைவனின் கவலை அழகாய் சித்தரிக்கப்பட்டுள்ளது.
(இதையேதான் "அவதார்" படத்திலும் பார்த்தோம்.)

கத்தி, ரத்தம் போன்ற வன்முறை காட்சிகள் இருந்தாலும் கதையோட்டத்தில் அவை பெரிதாக தெரியவில்லை.
பாடல்களும், பின்னணி இசையும் நலம்.

கிராபிக்ஸ் காட்சிகளில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அவை மன்னிக்கப்படக்கூடியவைதான். முடிந்த அளவு எல்லாமே சிறப்பாய்தான் இருக்கிறது.

எத்தனையோ கோடிகள் செலவு செய்து படம் எடுத்திருக்கிறார்கள். அத்தனை செலவும் திரையில் பார்க்கும்போது திருப்தி.

இயக்குனரே....
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறோம்.


திரையரங்கம் சென்று பாருங்கள். ஒரு பிரமிப்பூட்டும் அனுபவத்தை கண்டிப்பாய் உணர்வீர்கள்.



12 comments:

gumi said...

காசு வாங்கி எழுதியது மாறி இருக்கு ...
டைம் லைன் என்றொரு ஆங்கிலப் படம்.

இந்தப் படத்தில் ஒரு ஆராய்ச்சிக்காக மர்மத் தீவுக்குச் செல்லும் பேராசிரியர் ஒருவர் காணாமல் போகிறார். அவரைத் தேடி அவரது மாணவர் குழு அதே இடத்துக்குப் புறப்படுகிறது. ஆனால் 14-ம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டுக்குள் சென்றுவிடுகிறார்கள், திடீரென்று. அவர்கள் எப்படி கடந்த காலத்தோடு போரிட்டு, நிகழ்காலத்துக்குத் திரும்புகிறார்கள் என்பது கதை.

இதை சீன் பை சீன் காப்பியடிக்கவில்லை செல்வராகவன் என்றாலும், படத்தின் கதைக் கரு ஒன்றுதான். அதுமட்டுமல்ல.. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பல காட்சிகள் கிளாடியேட்டர் மற்றும் மெக்கனஸ் கோல்டில் நாம் பார்த்தவை

ஜெட்லி... said...

:))....சூப்பர்...

பா.வேல்முருகன் said...

நன்றி ஜெட்லி. தங்கள் வருகை நல்வரவாகட்டும்.

பா.வேல்முருகன் said...

நன்றி குமி. காசு வாங்கிக்கொண்டு எழுதவில்லை.
பிடித்திருந்ததனால்தான் எழுதினேன்.
அப்படிஎன்றால் எதிர்மறை விமர்சனங்கள் எல்லாம் காசு கிடைக்காததால் எழுதப்பட்டவையா ?

கதைக்கரு காப்பியடிக்கப்பட்டது என்றால் இப்போது வரும் எல்லா படங்களுக்குமே மூலத்தை தேடினால் எங்காவது கண்டிப்பாய் கிடைக்கும்.
படத்தில் திட்டமிடல் இல்லை என்பதை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம். ஆனால் இதை முளையிலேயே கில்லி எறிந்தால் இது போன்ற முயற்சிகள் பின்னாளில் நடக்காமலே போய் விடும்.

அஹோரி said...

நல்ல விமர்சனம்.

பா.வேல்முருகன் said...

நன்றி அஹோரி.

பா.வேல்முருகன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரவண்.

Anonymous said...

nice movie..

ஜீவன்பென்னி said...

ஒரே மாதிரியான சிந்தனை உடையவர்கள் இந்த உலகத்தில் நிறைய பேர் உண்டு.
நல்ல பார்வை.

சீனு said...

//காசு வாங்கி எழுதியது மாறி இருக்கு ... //

இவ-வோட விமரிசனமும் இத போன்றே இருக்கு.

//நன்றி குமி. காசு வாங்கிக்கொண்டு எழுதவில்லை.
பிடித்திருந்ததனால்தான் எழுதினேன்.
அப்படிஎன்றால் எதிர்மறை விமர்சனங்கள் எல்லாம் காசு கிடைக்காததால் எழுதப்பட்டவையா ?//

காசு வாங்கி கொண்டு என்றெல்லாம் சொல்லவில்லை. காசு வாங்கி கொண்டு எழுதுபவர் எழுதினால் இருப்பதை போன்று இருக்கு.

Sabarinathan Arthanari said...

நல்ல விமர்சனம் நம்முடையது http://sabaritamil.blogspot.com/2010/01/blog-post_19.html

Anonymous said...

Do you think this film can be understandable easily? I checked with many of my friends but sadly no one able to tell the story after the interval.

Post a Comment

Blog Widget by LinkWithin